பஞ்சாப்பில் 62 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சித்து ஆலோசனை..! தலை தூக்கும் கோஷ்ட்டி பூசல்!!

 
Punjab-Congress

முதல்வர் அமரீந்தர் சிங்குடன் மோதல் நடந்து வரும் நிலையில், 62 கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசில் தற்போது உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் பனிப்போர் நிலவியது. அமரீந்தரின் நடவடிக்கைகளை சித்து வெளிப்படையாகவே எதிர்த்துப் பேசி விமரிசித்து வந்தார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசி இருந்தார். அதேபோல் டெல்லி சென்ற பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  

இந்த சூழலில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். ஆனால் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் குறித்து விமர்சித்ததற்கு நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தி இருந்தனர். தற்போது அமரீந்தரும், சித்துவும் தங்களுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, அமிர்தசரஸில் உள்ள தனது இல்லத்தில் 62 கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பர்கத் சிங், சித்து ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? இது ஒரு பொது பிரச்சினை அல்ல. முதல்வர் பல பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அவர்தான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பஞ்சாப் காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது; இது, காங்கிரஸ் மேலிடத்துக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

From around the web