வருகிற 16-ந் தேதி முதல் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

 
Sabarimala

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16 -ந் தேதி திறக்கப்படுகிறது.

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் ஆரம்பத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி, ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.

இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு 17-ந் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை நிலக்கல்லில் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக பத்தனம்திட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் பம்பை மற்றும் நிலக்கல் வரை இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web