அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: பிரதமர் உறுதி
அசாம் மாநிலம் சோனித்புரில் இன்று காலை 7.51 மணிக்கு ரிக்டரில் 6.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தின் தேஸ்புர், கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கி வீடுகளில் இருந்த பொருட்களும் கீழே விழுந்ததால் மக்கள் பீதி அடைந்து வெளியே ஓடி வந்தனர். பல கட்டடங்கள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டது.
நாகான் பகுதியில் உள்ள ஒரு பெரிய கட்டடம் அருகில் உள்ள கட்டடத்தில் சாய்ந்தது. பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மேகாலயா, மேற்கு வங்கத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவாலுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அசாம் மக்கள் நலமுடன் இருக்க பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.