ஆளுக்கொரு திசையில் செல்லும் அரசியல் கட்சிகள்! உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
உபி மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது.சமாஜ்வாதி கட்சி தனித்து நிற்கும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்து விட்டார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் தனித்து தான் நிற்கப் போகிறார்.
“பிஎஸ்பி பாஜகவின் பி டீம் தான். பி என்ற எழுத்து அதைத்தான் குறிக்கிறது 75.மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 67 ஐ பாஜக கைப்பற்ற மாயாவதி உதவினார்,” என்று உபி மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. “காங்கிரஸ் என்பதில் முதல் எழுத்து சி. இது "கன்னிங்" அதாவது சூழ்ச்சி என்பதை குறிக்கிறது. காங்கிரஸ் ஆக்சிஜனில் உயிர்வாழும் நோயாளி. பகுஜன் என்றால் எஸ் சி . எஸ் டி, ஓ பி சி , மைனாரிட்டிகள் ஒடுக்கப்பட்டவர்கள் குறிக்கிறது. மத்தியிலும் மாநிலங்களிலும் பகுஜன் வாக்குகளை பெற்று நீண்டகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் அவர்களை அடிமைகளாக நடத்தியது.” என்று போட்டுத் தாக்கினார் மாயாவதி.
உ.பி. மாநிலத்தில் மட்டுமே உள்ள கட்சிகள் இப்படி வீராவேசமாக பேசும்போது இந்திய தேசிய காங்கிரஸ் உபி மாநில தலைவர் அஜய்குமார் லல்லு ,பேசாமல் சும்மா இருப்பாரா என்ன?. “சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இருக்கிறது.அந்தக் கட்சிகளைவிட காங்கிரஸ் தான் உறுதியான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மாற்றத்துக்கான காற்று வீசிவருகிறது. அந்த மாற்றத்தின் பெயர் பிரியங்கா காந்தி. அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கிறார். அவரது மேற்பார்வையில் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். அதன்மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைப்போம்,” என்று சூளுரைத்துள்ளார் அஜய்குமார் லல்லு. அசாத்திய தைரியம் தான்.
உபி மாநிலத்தில் பாஜக உள்பட 4 அணிகள் சட்டமன்றத் தேர்தல் களம் இறங்க காத்திருக்கின்றன. “முதலில் நாம் இந்தியர்கள். இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்ற பயத்தின் சுழற்சியில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ள கூடாது. இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் ஆதிக்கம் இங்கு இருக்க முடியாது. அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மரபணு தான் உள்ளது. சட்டத்துக்கு விரோதமாக தான்தோன்றித்தனமான தாக்குதல், இந்துத்துவா அல்ல. ஒரு முஸ்லிமும் இந்தியாவில் வசிக்க கூடாது என்று சொல்பவர் இந்து அல்ல. என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கியுள்ளார். பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல,” என்று கோடிட்டு காட்டுகிறார் மோகன் பகவத்.
இது தவிர ஹைதராபாத் அஸ்சாசுதீன் ஒவைசியின் கட்சியும் வாக்குகளை பிரிக்க தயாராகி வருகிறது. சிறுபான்மையோர் தலித் விவசாயிகள் தோழனாக விளங்கிய காங்கிரசின் வாக்கு வங்கி இன்று சிதறி கிடக்கிறது, குறிப்பிட்ட ஜாதி, மதம் சாராத கட்சியாக , இருந்த காங்கிரஸ் மீண்டும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சியை பிடிக்க கடுமையாக கட்டுப்பாடுடன் ஒற்றுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
-வி.எச்.கே.ஹரிஹரன்