ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது.. முதல்வர் பேச்சால் அதிர்ச்சி!

 
Yogi-Adityanath

ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது என முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்ததை அடுத்து அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டு பேரை மட்டுமே உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் மீது கார் ஏற்றியது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருப்பது ஏன் என உத்தர பிரதேச போலீசுக்கு கேள்வி எழுப்பி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தர பிரதேச போலீஸ், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று ஆஜராக வேண்டும் என 2வது முறையாக சம்மன் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில், ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், “விவசாயிகள் மீது கார் மோதியது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். தற்போது வெளியாகி இருக்கும் வீடியோக்களில் விவசாயிகள் மீது மோதும் காரில் யார் இருந்தது என்று தெரியவில்லை.

இதனால், ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது. போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web