நீட் வினாத்தாள் அவுட்... மாணவி உள்பட 8 பேர் கைது; வினாத்தாளின் விலை எவ்வளவு தெரியுமா?

 
Neet-paper-leaked

ராஜஸ்தானில் நீட் தேர்வில் மோசடி செய்த மாணவியையும் அவருக்கு உதவிய உறவினர் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இதற்கான நுழைவு தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. கொரோனா 2-ம் அலையின் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 202 நகரங்களில் கடந்த ஞாயிறு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில், ஜெய்ப்பூரில் தேர்வு எழுதிய மாணவி தினேஷ்வரி குமாரி என்பவருக்கு உடந்தையாக, தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ராம் சிங், தேர்வு மைய நிர்வாக பொறுப்பில் இருந்த முகேஷ் ஆகியோர் வினாத்தாளை போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப் வழியாக ஜெய்ப்பூரின் சித்திரகூட் பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் இருந்த இருவருக்கு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அதை ஷிகாரில் உள்ள சிலருக்கு அனுப்பி அதற்கான விடைகளை பெற்று அவற்றை ராம் சிங்கிற்கு அனுப்பி, அதன் மூலம் தினேஷ்வரி குமாரி சரியான விடைகளை எழுதியுள்ளார். இந்த மோசடிக்கு 30 லட்சம் ரூபாய் விலை பேசி, அதில் 10 லட்சத்தை தினேஷ்வரிகுமாரின் உறவினர் தயாராக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

18 வயதான மாணவி தினேஷ்வரி குமாரி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷிகாரில் இருந்து விடைகளை அனுப்பி கொடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web