இந்தியாவின் முதல் கொரோனா நோயாளியான கேரள மாணவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

 
Corona

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின்  உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் உகான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சீனாவில் இருந்து வந்த அவருக்குத்தான் முதன் முதலாக நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் இரண்டு முறை கொரோனா தொற்று பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு அண்மையில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பேட்டியளித்துள்ள திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் கே.ஜே.ரீனா, “டெல்லிக்கு சென்று படிப்பதற்காக அந்த மாணவி திட்டமிட்டிருந்தார். எனவே அவருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உடல் நலத்தோடு உள்ளார்,” என்று கூறினார்.

From around the web