கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு!

 
Mullappally-Ramachandran

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து அக்கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. எனவே இதற்கு பொறுப்பேற்று கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தேர்தல் தொடர்பாக விரிவான கடிதம் எழுதியுள்ள அவர், அதில் தான் மேலும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்பதையும் குறிப்பிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அந்த பதவியில் தொடருமாறு கட்சித்தலைமை அவரை கேட்டுக்கொண்டு உள்ளது. இதை நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மாநில காங்கிரஸ் தலைமைக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை மட்டுமே இந்த பதவியில் தொடர்வேன். மாநில காங்கிரஸ் தலைவராக எனக்கு கட்சித்தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால் தேர்தல் தோல்வியால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். எனவே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக யாரையும் குற்றம் சொல்லும் நோக்கம் இல்லை” என்று தெரிவித்தார்.

இதன் காரணமாகத்தான் தேர்தலுக்கு பின்பு முதல் முறையாக நேற்று முன்தினம் நடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்தார்.

From around the web