இந்த 6 கோரிக்கைகளை நிறைவேற்றுங்க.. அதுவரை போராட்டம் வாபஸ் இல்லை - விவசாயிகள் அதிரடி

 
Farm-laws

6 கோரிக்கைக்களை நிறைவேற்ற கோரி பிரதமர் மோடிக்கு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

விவசாயிகளுடனான பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் உள்ளிட்ட 6 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டம் திரும்பப் பெறப்படும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்ததை அடுத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அவருக்கு கடிதம் மூலம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

அதில், “11 முறை பேச்சு வார்த்தை நடந்தபோது எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது, ஒரு சார்பாக அறிவிப்பை வெளியிடுவது என்கிற வழியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளீர்கள். ஆனாலும், அதனை வரவேற்கிறோம். வாக்குறுதி அளித்துள்ளபடி மூன்று வேளாண் சட்டங்களையும் விரைவாக திரும்பப்பெருவீர்கள், வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம் என்று பிரதமருக்கு விவசாயிகள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.

மேலும், பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட 3 கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெறுவது, காற்று மாசு சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான தண்டணை பிரிவுகளை நீக்குவது ஆகிய 3 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில் டெல்லி, அரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ளன. அவற்றை திரும்பப்பெற வேண்டும்.

லக்கிம்பூர் கொலைகளுக்கு முக்கிய காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும்.

போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பத்துக்கு மறுவாழ்வுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். சிங்கு எல்லையில் நினைவகம் அமைக்க நிலம் வழங்க வேண்டும்.

இந்த 6 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அதற்கான பேச்சுவார்த்யையை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என்று விவசாயிகள் திட்டவடமாக கடிதத்தில் கூறியுள்ளனர்.

From around the web