புலிகள் கணக்கெடுப்புக்காக காட்டுக்குள் சென்ற பெண் வனக்காவலர்! நொடிப்பொழுதில் நடந்த பயங்கர சம்பவம்

 
Swati-Dumane

மராட்டியத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணியின் போது, பெண் வனக்காவலர் ஒருவர் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள கோலாரா வனச்சரகத்தில்  வனக்காவலராக பணியாற்றி வந்தவர் சுவாதி துமனே. நேற்று காலை 7 மணியளவில் சுவாதி துமனே 3 உதவியாளர்களுடன் கோலாரா வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினார்.

இதில் அவர் கோலாரா கேட்டில் இருந்து 4 கி.மீ. வரை காட்டின் மைய பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு சாலையில் பெண் புலி ஒன்று நிற்பதை குழுவினர் பார்த்தனர். புலி அவர்கள் நின்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு இருந்தது. அவர்கள் சுமார் ½ மணி நேரம் அங்கு காத்திருந்தனர்.

பின்னர் அடர்ந்த காட்டுக்குள் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க பின்னால் சென்றனர். இதை கவனித்த புலி, திடீரென வனக்காவலர் சுவாதி துமனேயை பாய்ந்து தாக்கியது. மேலும் உதவியாளர்கள் சுதாரிப்பதற்குள் புலி வனக்காவலரை அடர்ந்த வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. பின்னர் சுவாதி துமனேயை பிணமாக தான் மீட்க முடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.

Swati-dumane

மேலும் புலி தாக்கியதில் பலியான பெண் வனக்காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து கால்நடையாக சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தடோபா அந்தாரி புலிகள் காப்பக தலைமை வனத்துறை அதிகாரி ஜித்தேந்திர ராம்காவ்கர் கூறினார்.

புலிகள் கணக்கெடுப்பு பணியின் போது, புலி தாக்கி பெண் வனக்காவலர் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web