புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்!!

 
Farmer-Protest

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி திரண்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் ஒன்றிய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மூன்று புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.

ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதாவது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் நேற்று அனுமதி அளித்துள்ளனர்.

இந்தநிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி அளித்ததையடுத்து ஜந்தர் மந்தர் நோக்கி விவசாயிகள் சென்று கொண்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள அனைத்து எல்லைகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து கடந்த குடியரசு தினத்தன்று நடைபெற்றது போல வன்முறை நடைபெறாமல் இருக்க டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிர சோதனைக்கு பிறகே டெல்லிக்குள் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

From around the web