27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க கூடாது - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய அரசு அறிவித்த இடஒதுக்கீடு கொள்கை தொடர்பான அறிவிப்புக்கு எதிராக கோவாவைச் சேர்ந்த 17 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதில் ஒன்றிய அரசு கடந்த ஜூன் 29-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து, மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, இந்த இட ஒதுக்கிட்டை பின்பற்றாமல் நடத்த மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், திமுக சார்பில் வழக்கறிஞர் நெடுமாறன், ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதன்படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க கூடாது என்றும் இந்த வழக்கில் திமுகவை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனக் கோரியும், உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.