இந்தியாவில் மூன்றில் 2 பங்கு மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி... செரோ சர்வே தகவல்

 
Balram-Bhargava

இந்தியாவில் மூன்றில் 2 பங்கு மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி இருப்பதாக செரோ சர்வே முடிவுகள் காட்டுகின்றன.

நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதித்து, அவர்கள் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருக்கிறதா என சோதனை செய்யப்படுவது செரோ சர்வே என அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்து போய் இருக்கிறது என்று உறுதி செய்யப்படுகிறது.

இந்த செரோ சர்வேயை 4-வது முறையாக நாடு முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தி உள்ளது. இந்த சர்வே ஜூன், ஜூலை மாதங்களில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 செரோ சர்வேக்கள் நடத்தப்பட்ட நாட்டின் 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் தான் இந்த 4-வது செரோ சர்வேயும் எடுக்கப்பட்டுள்ளது. மொத்த பொதுமக்களில் 28 ஆயிரத்து 975 பேரும், 7,252 சுகாதார பணியாளர்களும் இந்த செரோ சர்வேக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன் முடிவுகளை ஒன்றிய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி நேற்று வெளியிட்டார். அதன் முக்கிய தகவல்கள் வருமாறு,

* இந்திய மக்களில் 6 வயதுக்கு மேற்பட்டவர்களில் 67.6 சதவீதத்தினரின் உடல்களில், அதாவது மூன்றில் இரு பங்கு மக்களிடத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி உள்ளது.

* மூன்றில் ஒரு பங்கினரின் உடல்களில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகவில்லை. அதாவது 40 கோடி பேர் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் இல்லை. இவர்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து உள்ளது.

* செரோ சர்வே மேற்கொள்ளப்பட்ட சுகாதார பணியாளர்களில் 85 சதவீதத்தினருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் இருக்கிறது. பத்தில் ஒருவர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

இதையொட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ள விஷயங்கள்,

* கொரோனா கால நடத்தைகளை பின்பற்றும் வகையில் தொடர்ந்து சமுதாய, மத, அரசியல் கூட்டங்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். அவசியமில்லாத பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

* குழந்தைகள் தான் கொரோனா தொற்றுநோயை சிறப்பாக கையாள முடியும் என்பதால் முதலில் தொடக்கப்பள்ளிகளை திறக்க பரிசீலிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

* பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டபின்னர் தொடக்கப்பள்ளிகளை திறப்பதுதான் விவேகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web