பிராமணர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கூறிய சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கைது..!

 
NandKumarBaghel

பிராமணர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த குமார் பாகேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இவரது தந்தை நந்த்குமார் பாகல் (வயது 86) பிராமணர்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு சென்ற அவர், அங்கு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘இந்தியாவில் உள்ள எந்தவொரு கிராமத்துக்குள்ளும் பிராமணர்களை அனுமதிக்காதீர்கள். இதுதொடர்பாக நான் மற்ற அனைத்து சமூகத்தினரிடமும் பேசுவேன். பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். வோல்கா ஆற்றின் கரைக்கே அவர்கள் அனுப்பப்படுவது அவசியம்’ என பேசினார்.

அவரது பேச்சு சாதி மோதலைத் தூண்டும் விதத்தில் உள்ளதாக புகார்கள் எழுந்தன. இது சர்ச்சையான நிலையில்,  நந்தகுமார் பாகல் மீது ஏராளமானோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த பிரச்னைக்கு பதிலளித்த முதல்வர் பூபேஷ் பாகல், “சட்டம் மிக உயர்ந்தது. நமது அரசாங்கம் அனைவரையும் ஆதரிக்கிறது. மாநிலத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட யாரும் இல்லை. அந்த நபர் எனது தந்தையாக இருந்தாலும். சத்தீஸ்கர் அரசாங்கம் ஒவ்வொரு மதத்தையும், சமூகத்தையும் மற்றும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான எனது தந்தை நந்த் குமார் பாகேலின் கருத்து வகுப்புவாத அமைதியை சீர்குலைத்திருக்கிறது. அவருடைய கருத்தால் நானும் வருத்தப்படுகிறேன்” என்று கூறினார்.

From around the web