அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்: முதல்வர் சர்பானந்த சோனாவால் நம்பிக்கை

 
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்: முதல்வர் சர்பானந்த சோனாவால் நம்பிக்கை

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என மாநில முதல்வர் பாஜக தலைவருமான சர்பானந்த சோனாவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் மெகா கூட்டணியை அமைத்தது. பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் காங்கிரஸ் இணைத்துக்கொண்டது.  

மேலும் இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா போன்ற கட்சிகளும் காங்கிரஸ் அணியில் இணைந்தன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தற்போதைய நிலவரப்படி  பாஜக 84 இடங்களிலும் காங்கிரஸ் 41 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வரும் நிலையில், அசாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது தற்போதைய முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் தெளிவாக தெரிவதாக அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

From around the web