குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு

 
Bhupendra-patel

குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்க இருக்கிறார்.

குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி, கடந்த 2014-ம் ஆண்டு இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் குஜராத்தில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்தி பென் படேல் முதல்வரானார். எனினும் 2 ஆண்டுகளில் இவர் மாற்றப்பட்டார். அதாவது 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர் பதவி விலகினார்.

இதைத்தொடர்ந்து ராஜ்கோட்டை சேர்ந்த விஜய் ரூபானி (வயது 65) குஜராத் முதல்வராக பதவியேற்றார். இவரது தலைமையின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-வது முறையாக மீண்டும் குஜராத்தின் முதல்வரானார். மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் முதல்வர் விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்தை சந்தித்து பேசிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  இதையடுத்து, குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? என்பதை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.

இந்நிலையில், குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவை நாளை பதவியேற்கும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. கட்லோடியா தொகுதி எம்.எல்.ஏவான பூபேந்திர படேல் குஜராத்தில் 17-வது முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

From around the web