பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட 34 வயது பெண்..! மும்பையில் கோர நிகழ்வு

 
Mumbai-Rape

மும்பையில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான சகிநாகாவில் செப்டம்பர் 9-ம் தேதி அதிகாலை நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டெம்போ வேனில் வைத்து, 34 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அந்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி, அந்தரங்க பாகங்களை சேதப்படுத்திய கோர சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

மேலும், வன்கொடுமை செய்துவிட்டு அப்பெண் டெம்போவில் இருந்தும் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சாலையில் துடித்துக் கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், உயிருக்கு போராடிய அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவரதைக்குள்ளானது தெரியவந்தது. இதனிடையே கொடூர சம்பவம் குறித்து விசாரணை வேட்டையில் போலீசார் இறங்கியிருக்கிறார்கள்.

Mumbai-Rape

அதில், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் டெம்போ வேனில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கி எறிவது உறுதியானது. அதனை அடிப்படையாக வைத்து வன்கொடுமை செய்த மோகன் சவான் (வயது 42) என்ற நபரை மும்பை போலீஸ் கைது செய்திருக்கிறது.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், சுமார் 33 மணிநேர போராட்டத்துக்கு பிறகு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மோகன் சவுகானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில், அந்த நபரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையே, இவ்வழக்கு விரைவில் விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

From around the web