கொரோனா முற்றிலும் சரியான பிறகே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்! கல்வி அமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் 10 ம்வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 1ம் தேதி நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 15ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்படாத நிலையில் பொதுத் தேர்வுகள் எழுதுவதில் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படும் எனவும், நிலைமை சீரான பிறகு பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் எனவும் பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதே கருத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.
இந்த கோரிக்கைக்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் இன்னும் 2அல்லது 3 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.