முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை விரும்புவது 30 வருடங்களுக்கு முந்தைய அரசியல்? அது திராவிட அரசியல் ஆச்சே?
கர்நாடக மாநிலத்தில் சிங்கம் என்ற அடைமொழியுடன் மக்கள் செல்வாக்கு மிக்க கம்பீரமான காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை ஐ.பி.எஸ். கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜகவில் சேர்ந்து அரசியலில் குதிப்பார் என்று பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. அந்த நேரம் தொடங்கி இப்போது வரையிலும் பிரதமர் நரேந்திர மோடி தனக்குப் பிடித்தமான தலைவர் என்று கூறி வருகிறார்.
தான் முதலமைச்சராக விரும்பவில்லை, நல்ல படித்த அதிகாரிகள் அந்த பதவியில் இருப்பார்கள், கட்சியை நான் வழிநடத்துவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்த போது அனைவருடைய பார்வையும் கரூரைச் சேர்ந்த இந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை மீது பாய்ந்தது.
கடந்தவாரம் முன்னணி தனியார் தொலைக்காட்சியில் பேட்டியும் அதற்கு முன்னதாக தற்சார்பு விவசாயம் என்று பத்திரிக்கை ஒன்றுல் ஆட்டுக்குட்டிவை வைத்துக் கொண்டுள்ள படத்துடனான பேட்டியும் வெளியானது. அது முதலாக அண்ணாமலையின் பழைய புதிய பேட்டிகள், கன்னட மொழியில் அவர் ஆற்றிய உரைகள் சமூகத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு ஆன்லைன் உரையாடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
“என்னுடைய எதிர்காலத் திட்டம் என்பது தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரனும். என்னுடைய ஆணித்தரமான நம்பிக்கை. நம்முடைய அரசியல் கொஞ்சம் ஆன்மீகம் சார்ந்த அரசியலாக இருக்க வேண்டும். மக்களுக்கு பணி செய்யக்கூடிய அரசியலாக இருக்க வேண்டும்.
ஒரு 30 வருசத்துக்கு முந்தய அரசியல் எப்படி இருந்ததோ அப்படி இருக்கனும்னு ஆசை. அதற்காகத் தான் என்னுடைய வேலையை கூட விட்டு வெளியே வந்து We The Leaders என்ற ஃபவுண்டேஷனை ஆரம்பித்துள்ளோம்.
வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடனும் என்ற ஆசை. நல்ல நேர்மையான ஊழலற்ற ஆன்மீக ரீதியாக தார்மீக முறையில் மக்களோடு சேர்ந்து, அவர்களுக்காக நாம செயல்படனும்.
எல்லோராலும் அரசியலுக்கு வரமுடியாது. அவங்கவங்களுக்கு வேலை இருக்கு. சில பேர் வருகிறோம். நல்லா பண்ணனும் என்ற ஆசை இருக்கு. அது தான் என்னுடைய எதிர்காலத் திட்டம்,” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
ஆன்மீக அரசியல் அப்படியே ரஜினிகாந்த் சொன்னது தான். ஆனால் 30 வருசத்துக்கு முந்தைய அரசியல் என்றால் அது கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலக்கட்டமாச்சே? 1989ம் ஆண்டு ஜனவரி முதல் 1991ம் ஆண்டு ஜனவரி வரையிலும் கருணாநிதி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அண்ணாமலை சொல்லும் முப்பது வருசத்துக்கு முந்தய அரசியலின் நாயகன் சாட்சாத் கருணாநிதி தான்.
கருணாநிதிக்கு முன்னால் 23 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார். அவருக்கும் முன்னால் 1977 தொடங்கி 1987ம் ஆண்டு டிசம்பர் 24 வரையிலும் எம்.ஜி.ஆர் முதலமைச்சராகவும் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தனர். தேசியக் கட்சியான காங்கிரஸ் ஓரம்கட்டப்பட்டு முழுமையான திராவிட அரசியல் காலக்கட்டம் அல்லவா அது!
அதற்கும் முந்தைய பத்தாண்டுகாலம், அதாவது 1967 முதல் 1976 வரையிலும் பேரறிஞர் அண்ணாவும் கருணாநிதியும் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். 1956ம் ஆண்டு முதலமைச்சரான காமராஜர் 1963ம் ஆண்டு பதவி விலகிவிட்டார். அதன் பின்னர் 1967 வரை முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்தின் ஆட்சியில் தான் தமிழகத்தில் கடும் பஞ்சம் நிலவியது, இந்தி எதிர்ப்பு போராட்டமும் பெரிய அளவில் வெடித்து இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அப்படின்னா, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை விரும்புவது 30 வருசத்துக்கு முந்தைய திராவிட அரசியல் தானா? 30 ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணாமலையின் வயது 6 என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கால அரசியல் பற்றி இவர் எப்படி, என்னென்ன தெரிந்து கொண்டார் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.