ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!
சென்னை ஐ.ஐ.டி-யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாத்திமா தற்கொலை வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸ் விசாரணை நடத்திவந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என இந்திய தேசிய மாணவா்கள் சங்கம், கேரளத்தைச் சோ்ந்த முகமது சலீம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா்.
ஆனால் உயர் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்தது. மேலும், சி.பி.ஐ. விசாரணை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது. மகளின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக பாத்திமாவின் தந்தை கூறியிருந்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.