தமிழகம்.. வந்தாரை வாழவைக்கும்.. கவலை வேண்டாம்! முதல்வர் உறுதி!
கொரோனா ஊரடங்கினால் தமிழ்நாட்டில் சிக்கி தவிக்கும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேற்கு வங்கம், ஒடிசா, அஸ்ஸாம், உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இது குறித்து நேரடியாகவே தலையிட்டு, நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இது தொடர்பாக ட்விட்டரில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், 1,34,569 வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே வெளிமாநிலத்தில் உள்ள அவர்களின் உறவினர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். என்று பதிவிட்டுள்ளார்.