நிரம்பி வழியும் 1000 குளங்கள்! 3 அணைகளும் நிரம்பியது!
வடகிழக்கு பருவமழையினால் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன. வங்கக்கடலில் தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கடந்த இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 129.90 அடியாக உயர்ந்தது.
மேலும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 143.83 அடியாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணை இன்று காலை நிலவரப்படி 68.30 அடியாக உயர்ந்துள்ளது.
அதே போல் நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையினால் கடனாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன. ராமநதி, கருப்பநதி ஆகிய அணைகளும் தொடர் நீர்வரத்தால் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது.
கொடுமுடியாறு அணைக்கும் தற்போது தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2518 குளங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1000 குளங்கள் வரை நிரம்பி தழும்பிக் கொண்டிருக்கிறது.