ஐதராபாத்தில் நடிகை அஞ்சலிக்கு திருமணமா..?
நடிகை அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது.
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் படம் வந்தது. தற்போது தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.
34 வயதான அஞ்சலி, நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் பேசினர். அஞ்சலி அளித்த பேட்டியொன்றில் நான் காதலித்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் நிறைவேறவில்லை. தோல்வியில் முடிந்து விட்டது என்றார். காதலித்தவர் பெயரை வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில் அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் தெலுங்கு பட உலகில் பரவி வருகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஞ்சலி தரப்பில் இதனை உறுதிப் படுத்தவில்லை.