‘அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள் டிராக்... பாடகர் எஸ்.பி.பி.க்கு சிறப்பு மரியாதை செலுத்த படக்குழு திட்டம்

 
Annaatthe

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் முதலாமாண்டு நினைவு நாளில் ‘அண்ணாத்த’ சிங்கிள் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கடைசியாக ரஜினிக்கு பாடிய பாடல் அண்ணாத்த படத்தின் ஓபனிங் பாடல்.

ஆகவே, அந்த பாடலை செப்டம்பர் 25-ம் தேதி அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From around the web