‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிப்பரப்பை நிறுத்த வேண்டும்... அமேசான் நிறுவனத்தை எச்சரிக்கும் பாரதிராஜா!!

 
Bharathiraja

‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிப்பரப்பை அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து நிறுத்த வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2019-ல் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட் அடித்த சீரிஸ்தான் தி பேமிலி மேன். மனோஜ் பாஜ்பாயி, சந்தீப் கிஷன், பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து, பெரிய அளவில் இந்த சீரிஸ் வைரலானது. ராஜ் நிதிமோரு, கிருஷ்ணா டிகே ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர்.

மனோஜ் பாஜ்பாயி இதில் என்ஐஏ அதிகாரியாக நடித்து இருப்பார். இந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

ஈழ போராட்டத்தை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஈழ போராளிகள் இந்திய பிரதமரை கொல்ல திட்டமிடுவதாக களம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து செயல்படும் ஈழ பெண் பாத்திரத்தில் சமந்தா ராஜி என்ற பெயரில் நடித்துள்ளார். இந்த தொடர் இந்த கதைக்களம் காரணமாக தமிழர்கள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிப்பரப்பை அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து நிறுத்த வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்.

“எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம்
காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும்,அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.


அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும்  தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம் , வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

From around the web