பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் காவல் நிலையத்தில் புகார்
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் படத்தயாரிப்புக்காகப் கடன் வாங்கியுள்ளார். தன் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில பத்திரங்களை ஆவணங்களாக அளித்து சில லட்சங்களைக் கடனாகப் பெற்றுள்ளார்.
கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை. அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.
இதனால் சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் விஷால் சார்பாக அவருடைய மேலாளர் ஹரி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.