ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் மாற்றம்

 
Annaatthe

ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

டி.இமான் முதன் முதலாக ரஜினி படத்துக்கு இசை அமைக்கிறார். கிராமத்துப் பின்னணியில் சிவாவின் அதிரடி மசாலா, சென்டிமெண்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்காக சில முக்கிய காட்சிகளைப் படமாக்க வேண்டியதுள்ளது.

இதனை மேற்கு வங்கத்தில் படமாக்கப் படக்குழு திட்டமிட்டது. இதற்காக இன்று (ஜூலை 14) ரஜினி அங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், தற்போது மேற்கு வங்கத்தில் நடைபெற வேண்டிய படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் படப்பிடிப்பு நடத்த இன்னும் சில அனுமதிகளுக்காகப் படக்குழு காத்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கு முன்னதாக சென்னையில் சில காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்குள் மேற்கு வங்கத்தில் அனுமதி கிடைத்துவிட்டு, அதன் பின்பு படப்பிடிப்பைத் திட்டமிட முடிவு செய்துள்ளது படக்குழு.

மேற்கு வங்க படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. அனைத்து பணிகளையும் முடித்து தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web