‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் கொண்டாட்டம்... ஆட்டை பலி கொடுத்து ரசிகர்கள் கொடூர செயல்..!
‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள், ஒரு ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டி பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
இதனை கொண்டாடும் விதமாக அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேனராக வைத்து அதன் முன்பு மேள தாளம் முழங்க விசிலடித்து உற்சாகமடைந்த ரசிகர்கள், ஒரு ஆட்டின் தலையை வெட்டி பலிகொடுத்து அதன் ரத்தத்தை பேனரில் இருந்த ரஜினியின் படத்தின் மீது தெளித்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடம் எங்கு என தெரியாத நிலையில், இந்த ஈவு இரக்கமற்ற செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஆட்டை கொடூரமான முறையில் பலி கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.