மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் பள்ளிச் சிறுவர்கள்! கதறும் பெற்றோர்கள்!
கொரோனோ பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கால வரையின்றி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி திருச்சியின் புறநகர் பகுதிகளில் காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் வசித்து வரும் பள்ளிச் சிறுவர்களை பண ஆசை காட்டி ஆற்று மணலை கொள்ளையடித்து வருகிறார்கள் கொள்ளையர்கள்.
மணல் திருடும் கும்பல் நேரடியாக திருட்டில் ஈடுபடாமல் வீடுகளில் விடுமுறையில் இருக்கும் மாணவர்களை இச்செயலில் ஈடுபடுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்களும், பெற்றோர்களும் பெருத்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தச் செயலில் ஈடுபடுத்தப்படும் பள்ளிச் சிறுவர்கள் கிடைக்கும் பணம் மூலம் பாக்கெட் சாராயம், கஞ்சா என போதைக்கும் அடிமையாகி விடுகின்றனர். இப்பகுதி காவல்துறை இத்தகைய செயலில் ஈடுபடும் இளம் சிறுவர்களைப் பிடித்து காலை, மாலை இரண்டு வேளையும் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடும் படி அறிவுறுத்தியிருக்கிறது.
பள்ளிப் பாடங்களை மறந்திருக்கும் மாணவர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர் பெற்றோர்கள்.