கொரோனாவிலிருந்து சென்னை இளைஞர் குணமடைந்தார்.. அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 21 வயது இளைஞர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து சென்று சென்னை திரும்பிய அந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயிலிருந்து குணமடைந்தவருக்கு இரண்டு தடவை கொரோனா டெஸ்ட் செய்து பார்க்கப்பட்டது.
இரண்டு சோதனையிலும் கொரோனா இல்லை என்று முடிவுகள் வந்ததால் மருத்துவமனையிலிருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இளைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அமெரிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கண்காணித்து வரும் உலக கொரோனா பாதிப்பு கணக்கின் படி இந்தியாவில் 887 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளாதாக கூறப்பட்டுள்ளது. அதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 73 பேர் குணமடைந்துள்ளாதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.