பெற்றோர்கள் ஆதரவுடன் தமிழகத்தில் கலப்புத் திருமணங்கள் அதிகரிக்கிறதா?
சென்னை : தமிழகத்தில் ஆணவக் கொலைகள் ஆங்காங்கே நடந்து வரும் வேளையில் மூத்த பத்திரிக்கையாளர் க.ஜெயகிருஷ்ணன் காதல் கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர்கள் சம்மதத்துடன் கலப்பு திருமணங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது
“நேற்று நெருங்கிய உறவினர் ஒருவரின் மகன் நிச்சய விழாவுக்கு சென்று இருந்தோம். அவர்கள் நாடார். மணமகள் முதலியார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கே வந்து இருந்தவர்களை பார்த்த போதுதான் எத்தனை காதல் திருமணங்கள் சாதியைக் கடந்து எந்த விதமான மறுப்பும் இல்லாமல் பெற்றோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு செய்து வைக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிந்தது.
நாடார் – பிள்ளைமார்
நாடார் – பிராமணர்
நாடார் – வன்னியர்
நாடார் – நாயர்
நாடார் – தலித்
நாடார் – மேனன்
நாடார் – நாயுடு
கிறிஸ்தவ நாடார் – கிறிஸ்தவ பிராமணர்
நாடார் – தேவர்
உறவினர்களில் இப்போது நினைவுக்கு வந்தவர்கள் மட்டும் இவர்கள். சிலர் விடுபட்டு இருக்கக் கூடும். நண்பர்கள் குடும்பங்களில் இதை விட அதிகம். சமுதாயத்தில் யாராலும் தடுக்க முடியாதவாறு, வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உங்கள் குடும்பங்களிலும் நிச்சயம் இத்தகைய திருமணங்கள் நிறைய சிறப்பாக நடந்து இருக்குமே. எண்ணிப் பாருங்கள் தெரியும். அனைவரும் காதல் திருமணங்களுக்கு ஆதரவாக இருப்போம். அன்பு செழிக்கட்டும்,” என்று கூறியுள்ளார்.
நேரில் சந்தித்த நாடார் கலப்பு திருமண குடும்பங்களை மட்டும் அவர், சுட்டிக் காட்டியிருந்தாலும், ஒரு திருமணக் கூட்டத்திலேயே இத்தனை கலப்பு மண தம்பதிகள் என்றால், தமிழகம் முழுவதும் இத்தகைய தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. 1969-76ம் ஆண்டுகளின் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் கலப்புத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மூத்த பத்திரிக்கையாளரான க.ஜெயகிருஷ்ணன், தமிழில் முதன் முதலாக வணிகப் பத்திரிக்கையான ‘வளர் தொழில்’ மற்றும் தமிழில் முதல் கணிணிப் பத்திரிக்கையான ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழ்களின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று, வணிகர்களுக்கான சிறப்புத் தகவல்களுடன் முப்பது ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் வளர் தொழில். இந்தியாவிலேயே மாநில மொழிகளில் தொடங்கப்பட்ட முதல் கணிணி இதழ் ‘தமிழ் கம்ப்யூட்டர்’ ஆகும். ஆங்கில மொழிப் புலமை இல்லாத கிராமப்புற மாணவர்களும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை தொடங்கப்பட்டதாகும்.
– வணக்கம் இந்தியா