2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா? இந்தியன் வங்கி நடவடிக்கையில் மர்மம்!
ஏடிஎம் மையங்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை இந்தியன் வங்கி நீக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 2016-ம் ஆண்டில் மோடி அரசு அறிவித்தது. தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு 3 மாதங்களாக ஏ.டி.எம் மையங்களில் மக்கள் காத்துக் கிடந்தனர். பலர் உயிரிழந்தனர்.
பணமிழப்பு நடவடிக்கையினால் மக்களின் சேமிப்பு குறைந்ததோடு, சிறு, குறுந்தொழில்கள் மிகவும் பாதிப்படைந்தன. பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்து விட்டது என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஏ.டி.எம் மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்களில் செலுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும்போது 2,000 ரூபாய் நோட்டுகளை செலுத்த வேண்டாம் எனவும் இந்தியன் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியின் இந்த நடவடிக்கை 2,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவிப்பதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் ஒரு பணமிழப்பு நடவடிக்கை அமல் படுத்தப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.