இந்தியாவுக்கு முழு அளவிலான உதவிகளை செய்து வருகிறது அமெரிக்கா: ஜோ பைடன்

 

இந்தியாவுக்கு முழு அளவிலான உதவிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது என ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை காரணமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மருத்துவத்துறை திணறி வருகிறது.  உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, பிரதமர் மோடியுடன் நிறைய விசயங்களை பேசியுள்ளேன்.  கொரோனாவுக்கான சிகிச்சைக்கு தேவைப்படும் மற்றும் குணமடைய உதவும் ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகளை வழங்குவது உள்பட இந்தியாவுக்கு தேவைப்படும் முழு அளவிலான தொடர்ச்சியான உதவிகளை உடனடியாக அமெரிக்கா அனுப்பி வருகிறது.

கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான இயந்திரங்களுக்கு தேவையான இயந்திர பாகங்களையும் நாங்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.  இந்தியாவுக்கு தடுப்பூசிகளை எப்பொழுது எங்களால் அனுப்பி வைக்க முடியும் என்பது பற்றியும் இந்திய பிரதமர் மோடியுடன் விவாதித்துள்ளேன்.

நாங்கள் தொடக்க காலத்தில் சிக்கலில் இருந்த தருணத்தில் இந்தியா எங்களுக்கு உதவி செய்தது என ஜோ பைடன் குறிப்பிட்டு பேசினார்.