நியூயார்க்கில் கோவில் அர்ச்சகர் மீது தாக்குதல்!
வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் காவியுடை அணிந்து சென்று கொண்டிருந்த சுவாமிஜி ஹரிஷ் சஞ்சர் பூரியை, 52 வயது செர்ஜோ குவேயா என்பவர் வழிமறித்துள்ளார். ‘உன்னை இங்கே பார்க்க விரும்பவில்லை’ என்று சொல்லிக் கொண்டே குடையால் குத்தியுள்ளார். பின்னர் கைகளால் முகத்தில் குத்தியும் உள்ளார்.
தலை, மூக்கு, மார்பு, கைகளில் படுகாயம் அடைந்த சுவாமிஜிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. “என்னை தாக்கியவருக்காக பிரார்த்தனை செய்கிறேன், சில நேரங்களில் மனிதர்களு எந்தக்கட்டுப்பாடும் இல்லாமல் ஆகிவிடுகிறார்கள் விடுகிறார்கள்”, என்று அவர் கூறியுள்ளார்.
செர்ஜோ குவேயா வை கைது செய்த போலீசார் ஆயுதம் வைத்திருத்தல், தாக்குதல், தொல்லை கொடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சொந்த ஜாமினில் செர்ஜோ பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து வருகிறது. இனரீதியான விரோதத்தால் செர்ஜோ இதைச் செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
நியூயார்க் மாநில 6வது தொகுதி அமெரிக்க பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் க்ரேஸ் மெங் இந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் அமெரிக்க அடையாளம் கிடையாது. உலகெங்கிலிருந்தும் வந்துள்ள பல்லின மக்கள் குவின்ஸ் பகுதியை தங்கள் நிரந்தர இருப்பிடமாகக் கொண்டுள்ளார்கள். இந்த செழுமை வாய்ந்த பன்முகத் தன்மையை பெருமையாகக் கருதுகிறோம்”, என்று அறிக்கை மூலம் க்ரேஸ் மெங் கூறியுள்ளார்.