சோமாலியாவில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து..! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!!

 

40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற விமானம் சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் விபத்துக்குள்ளானது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து ஸ்கைவர்ட் விமானம் இன்று காலை புறப்பட்டு வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேராவுக்குச் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், சோமாலியா-கென்யா எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் உள்ள எல்வாக்கில் உள்ள புராஹேச் இராணுவ தளத்தில் ஸ்கைவர்ட் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. அதையடுத்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் இயந்திர கோளாறு காரணமாக நடத்ததாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணைக்கு விமான வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கெடோ பகுதி சோமாலிய தேசிய இராணுவத்தின் (எஸ்.என்.ஏ) கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத குழு எப்போதாவது இப்பகுதியில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.