இந்திய வம்சாவளி என்ஜினீயருக்கு ஆயுள் சிறை: அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

 

மனைவி, குழந்தைகளை கொன்ற இந்திய என்ஜினீயருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத்துறை வல்லுனராக இருந்து வந்தவர், சங்கர் நாகப்பா ஹங்குட் (வயது 55). இந்திய வம்சாவளியான இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு, இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை படுகொலை செய்து விட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சங்கர் நாகப்பா ஹங்குட் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை அங்குள்ள கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின்போது, அவர் தனது மனைவி ஜோதி (வயது 46) மற்றும் குழந்தைகள் வருண் (வயது 20), கவுரி (வயது 16), நிஸ்சால் (வயது 13) ஆகியோரை படுகொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர்களுக்கு தேவையான பணத்தை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால்தான், இந்த கொலைகளை தான் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிளேசர் கவுண்டி நீதிமன்றம் அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து அவர் கருத்து கூற மறுத்து விட்டார்.