இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்லவேண்டாம்... கனடாவில் மாணவர் கொலையைத் தொடர்ந்து இந்தய தூதரகம் எச்சரிக்கை

 

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, டொராண்டோவிலுள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

நேற்று அதிகாலை, கனடாவின் நோவா ஸ்கோசியாவிலுள்ள ட்ரூரோ நகரில், பிரப்ஜோத் சிங் கத்ரி (வயது 23) என்ற இந்திய மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றாலும், இது இன ரீதியான தாக்குதல் என இந்தோ கனடா சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஒட்டாவாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகம், இந்தியர்களின் பாதுகாப்பை, குறிப்பாக இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கனடா அரசை வலியுறுத்தியுள்ளது.

மாணவரின் உடலை இந்தியா அனுப்ப அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்துள்ள டொராண்டோவிலுள்ள இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களுக்கு தனியாக செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய தூதரகம், சந்தேகத்துக்குரிய மற்றும் இனவெறுப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டால் உடனடியாக உள்ளூர் போலீசாரிடம் புகாரளிக்குமாறும் இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.