அமெரிக்காவில் அசத்தப் போகும் குற்றாலக் குறவஞ்சி!
18ம் நூற்றாண்டில் மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர் திருக்குற்றாலநாதர் மீது இயற்றிய குறவஞ்சி நாடகம் திருக்குற்றலாக்குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. குறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வரும் இந்த இலக்கிய நூல், இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம் வரும் சனிக்கிழமை, பிப்ரவரி 15ம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 75 உள்ளூர் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை முன்னணி நாட்டியக்கலைஞர் பிரதீபா நடேசன் வடிவமைத்து இயக்கியுள்ளார்.
ஃப்ரிஸ்கோ சென்டினியல் உயர்நிலைப் பள்ளியில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே பூந்தமல்லியில் அமைந்துள்ள பார்வையற்ற குழந்தைகள் பள்ளிக்கும், ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் SEED அமைப்பிற்கும் நிதியுதவி செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு அறக்கட்டளையின் டல்லாஸ் கிளையின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏராளமான தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள். குறவஞ்சி நாட்டிய நாடகத்திற்கான வடிவமைப்பு, திட்டமிடல், பயிற்சி, உடையலங்காரம், மேடை அலங்காரம் என பல்வேறு பணிகளை இயக்கம் நடன கம்பெனியினர் செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு அறக்கட்டளை டல்லாஸ் கிளையின் சார்பில், இயக்கம் நடன கம்பெனியின் “கொஞ்சும் சலங்கை” நாட்டிய நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. அதன் மூலம் திரட்டப்பட்ட நிதியுதவியைக் கொண்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்காக தமிழகத்தில் செயல்பட்டு வரும் அன்பாலயம் அமைப்பிற்கான நலத்திட்ட பணிகள் செய்திருந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கலைஞர்களின் பங்கேற்பில் சிறந்த நாட்டிய நாடக நிகழ்ச்சியையும், அதன் மூலம் நிதி திரட்டி தமிழகத்தில் நலத்திட்டங்களும் செய்யும் முயற்சியை தமிழ்நாடு அறக்கட்டளையின் டல்லாஸ் கிளை சார்பில் முன்னெடுத்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் வசிக்கும் குழந்தைகள் உட்பட நாட்டியக் கலைஞர்களின் பங்கேற்பில் இந்த“குறவஞ்சி”நாட்டிய நாடகம் அரங்கேற்றப்படுகிறது.