அடுத்த ஆண்டு அட்லாண்டாவில்! இந்த ஆண்டு இணையத்தில் ஃபெட்னா தமிழ் விழா!!
ஃபெட்னா தமிழ் விழாவில் தமிழகத்திலிருந்து பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், வல்லுனர்கள், நிபுணர்கள் உள்பட ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பதும் நடைமுறை வழக்கமாகும்.
கொரொனா ஊரடங்கால் தமிழகத்திலிருந்து விருந்தினர்கள் வருவது சாத்தியமில்லாமல் போனது. அமெரிக்காவில் முழுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்படாத நிலையில் பெரிய நிகழ்வுகள் நடத்துவதற்கும் அனுமதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அட்லாண்டாவில் நடக்கவிருந்த 2020 ஃபெட்னா தமிழ் விழா, அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் விழாவை இடைவெளி இல்லாமல் நடத்திவிட வேண்டும் என்றும் பேரவைக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்போது உள்ளா சூழ்நிலையில் இணைய வழியாக விழாவை நடத்துவது சிறப்பாக அமையும் என்றும் முடிவு செய்துள்ளனர். வழக்கம் போல் மூன்று நாட்கள் நிகழ்ச்சியாக ஜுலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இணையவழியாக ஃபெட்னா தமிழ் விழா நடைபெற உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் விழாவில் முதல் நாள் திருக்குறம் மறை ஓதுதல், தொழில் முனைவோர் கூட்டம், சிறப்புச் சொற்பொழிகள், கவியரங்கம் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் சிறப்புச் சொற்பொழிவுகளுடன், மரபுக் கலை, மக்களிசை, இசைத்தமிழ், வர்மக்கலை, இளையோர் கலந்துரையாடல், திரைப்பட கலைஞர்கள் நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
மூன்றாவது நாள் மரபு கலை, உலகத் தமிழர்கள் விழிப்புணர்வு, மெல்லிசை நிகழ்ச்சி. தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. fetnaconvention.org என்ற இணையத்தளம் மூலம் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதிலிருந்தும் பார்த்து மகிழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசுவாமி மற்றும் பேரவைச் செயற்குழுவினர் செய்து வருகின்றனர்.