கொரோனா உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு வாய்ப்புகள் அதிகம் - பிரிட்டிஷ் உளவுத்துறை

 

கொரோனா சீனாவின் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என்று பிரிட்டிஷ் உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. தொற்று பரவி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கட்டுப்படுத்த உலக நாடுகள் படாத பாடு பட்டு வருகின்றன.

தி சண்டே டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், கொரானா வைரஸ் ஊகான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து, முழுமையாக உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசின் தடுப்பூசித் துறை அமைச்சர் நதீம் சகாவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசின் மூலதாரம் குறித்து முதலில் இது போன்ற செய்திகள் வெளியானாலும், அதற்கு வாய்ப்பில்லை என பரவலாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது அது குறித்து பல தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகும் நிலையில், ஆய்வகத்துடன் நெருங்கிய தொடர்புடைய சில நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.