மீண்டும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது தாக்குதல்! ஒருவர் கைது!!

 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானை தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
 
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 16) பிற்பகல், லூர்து (ஹவுட்ஸ்-பைரனீஸ்) நகருக்கு சென்றார். அங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை பங்குதாரர்களை சந்தித்து உரையாடினார். அப்போது மாலை 4.30 மணி அளவில் நபர் ஒருவர் அதிபரை தாக்க முற்பட்டார்.
 
அதிபரை மக்களும் ஊடகத்தினரும் சூழ்ந்திருக்கும் போதும், திடீரென ஒருவர் “வெட்கம். நீங்கள் ஒரு முழுமையான நாத்திகர்” என கோஷமிட்டுக்கொண்டு அதிபரை தாக்க முற்பட்டுள்ளார்.

ஆனால்  கூட்டம் சுற்றி இருந்ததால் அவரால் அதிபரை நெருங்கமுடியவில்லை. அதற்குள்ளாக அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரால் அதிபரை தொட முடியவில்லை.

அவரை கைது செய்ய முற்படும் போது மற்றொரு நபர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்த முற்பட்டவர் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த மாதம் ஜூன் 8-ந் தேதி டிரோம் நகருக்கு அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, 28 வயதுடைய ஓருவர் அதிபரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.