மனைவி டார்ச்சர்.. நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்!!

 

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்ததுள்ளது.

37 வயதான ஷிகர் தவான், கடந்த 2010 முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார். ஐசிசி தொடர்களில் இவரது செயல்பாடு அபாரமாக இருக்கும். அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இடது கை பேட்ஸ்மேனான இவர் தொடக்க ஆட்டக்காரர்.

ஷிகர் தவான் கடந்த 2012-ம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஸோராவர் என்ற மகன் உள்ளார். இவர்களின் திருமணத்துக்கு முன்பே ஆயிஷாவுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபருடன் திருமணமாகி, அவர்களுக்கு 2 மகள்களும் இருந்தனர்.

அந்த நபருடனான திருமண உறவை முறித்துக்கொண்டு, நிரந்தரமாக இந்தியாவில் தன்னுடன் வசிப்பதாக உறுதி அளித்ததன், பேரில்தான் ஷிகர் தவான் ஆயிஷாவை மணம் முடித்துள்ளார். ஆனால், ஆயிஷா சொன்னபடி நடந்துகொள்ளாமல் முன்னாள் கணவருடன் மீண்டும் நெருக்கமாக இருந்துள்ளார். தனது 2 மகள்கள் மற்றும் மகன் ஸோராவருடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பியுள்ளார். இதனால் தனது மகனை பிரிந்து வேதனைக்கு உள்ளான ஷிகர் தவான், விவகாரத்து பெற முடிவு செய்தார்.

தன்னை வற்புறுத்தி அவரது பணத்தில் ஆஸ்திரேலியாவில் தன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளதாவும் ஆயிஷா மீது தவான் தரப்பில் புகார் கூறப்படுகிறது. ஷிகர் தவானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் அங்கம் வகிக்கும் ஐபிஎல் அணி நிர்வாகத்துக்கு செய்திகள் அனுப்பியதாகவும் ஆயிஷா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் காரணங்களை முன்வைத்து ஷிகர் தவான் டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாகரத்து வழக்கில் நீதிபதி ஹரிஷ் குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், தவானின் வாதங்களை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

மேலும், ஷிகர் தவானின் மகன் ஸோராவர் ஒவ்வொரு ஆண்டும் பாதி விடுமுறை நாட்களை தவான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செலவிடும் வகையில், மகன் ஸோராவரை இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் என்றும் ஆயிஷாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷிகர் தவான் விரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மகனைப் பார்க்கவும், இருவரும் வீடியோ காலில் சந்தித்து உரையாடவும் ஒத்துழைக்க வேண்டும் என ஆயிஷாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.