உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13வது ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. ரிசர்வ் வீரர்களை கூட இம்முறை பிசிசிஐ அறிவிக்கவில்லை. வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், பிறகு மாற்றம் செய்யப்படும் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறியுள்ளார். இந்திய அணியில் காயத்திலிருந்து திரும்பியுள்ள கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு உலககோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கிறது. தற்போது அணியில் இருக்கும் 15 பேரும் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அணியின் சமநிலை சிறப்பாக இருப்பதாகவும், பேட்டிங்கின் ஆழமும் இருக்கும் வகையில் அணி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அஜித் அகார்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இசான் கிஷன் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் , திலக் வர்மா போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் தரப்படவில்லை.