திடீரென மும்பை பறக்கும் பும்ரா.. அப்பாவானார் ஜஸ்பிரித் பும்ரா.. குவியும் வாழ்த்துகள்!

 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. ஹைபிரிட் மாடலில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இலங்கையில் உள்ளது. உலகக்கோப்பை நெருங்குவதால், சீனியர் வீரர்கள் அனைவரும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 10 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் 16 ரன்கள் எடுத்தார். இதன்பின் மழை பெய்ததால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் தயாராகி வந்த சூழலில், திடீரென நட்சத்திர வீரர் பும்ரா மும்பைக்கு விமானம் ஏறியுள்ளார்.

இதனால் மீண்டும் பும்ரா காயமடைந்தாரா என்ற ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பும்ரா மும்பை திரும்புவதற்காக காரணம் தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் பும்ரா தனது முதல் குழந்தை பிறப்புக்காக மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்க மும்பை திரும்பி வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் - பும்ரா இருவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதன்பின் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானதாக தகவல் வெளியாகியது. இதனிடையே காயமடைந்த பும்ரா, தனது மனைவியுடன் அதிக நேரம் செலவிட்டு வந்தார். தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேஷ் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.