உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம்: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!!

 

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அமெரிக்காவின் யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.