பரபரப்பு! பாலியல் புகாரில் ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை கிரிகெட் வீரர்!!

 

பாலியல் புகார் காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியின் பல வெற்றிக்கு பங்களிப்பாக இருந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடரின் இடையே குணதிலகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடன் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. அதன் பின்னர் இன்று காலை இலங்கை அணி நாடு திரும்பிய நிலையில் தனுஷ்கா சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்கா குணதிலகா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக போலீசாரால் தெரிவித்துள்ளனர். இதனிடையே தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே இலங்கை அணி சொந்த நாடு திரும்பியுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியில் வன்கொடுமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டேட்டிங் செயலி மூலம் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த 29 வயது பெண், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் இந்த வார தொடக்கத்தில் சிட்னியில் உள்ள குடியிருப்பில் நடந்துள்ளது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.