காமன்வெல்த் மல்யுத்த போட்டி: இந்தியாவின் ரவிக்குமார் தஹியா தங்கம் வென்று அசத்தல்

 

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் ரவிக்குமார் தஹியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற்று வருகிறது.

9-ம் நாளான இன்று காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசாத் அலியை எதிர்த்து ரவிக்குமார் தஹியா விளையாடினார். அந்தப் போட்டியில் 14-4 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீரரை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா நைஜீரியாவின் வெல்சன் எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே இரு வீரர்களும் புள்ளிகள் எடுக்க முயற்சி செய்தனர்.  அதன்பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அசத்தலாக புள்ளிகளை குவித்தார். இறுதியில் 10-0 என்ற கணக்கில் போட்டியை வென்று அசத்தினார். அத்துடன் இந்தியாவிற்கு 4-வது தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தியா காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.