புகைப்பிடிப்பதை கைவிட்ட ஆண்கள்! ஆய்வில் தகவல்
புகையிலையை எந்த வகையில் பயன்படுத்தினாலும், ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என உலகம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், மக்கள் மத்தியில் புகையிலை பொருட்களின் பயன்பாடு தொடர்கிறது.
இந்நிலையில் புகைபிடிக்கும் மற்றும் புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 2000 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை சுமார் 139 கோடியாக இருந்தது. இது 133 கோடியாக குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை உள்ளிட்ட அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு முயற்சியால் ஆண்கள் மத்தியில் இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு 80 லட்சம் மக்கள் புகையிலை பயன்பாட்டால் உயிரிழக்கின்றனர் என்றும் அவர்களில் 70 லட்சம் பேர் நேரடியாக புகையிலையை பயன்படுத்தியவர்கள் என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.