சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்லும் 36 பெண்கள்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்தில் பங்கேற்க 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெண்கள் செல்ல அனுமதி அளித்திருந்த தீர்ப்பே அமலில் உள்ளதால், முன்பதிவு செய்துள்ள பெண்களை அனுமதிப்பது குறித்து கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
பெண்கள் அனுமதிக்கப்பட்டால் கடந்த ஆண்டைப்போலவே பிரச்னை ஏற்படுமோ எனவும் தேவசம் போர்டு அமைப்பினர் அச்சத்தில் உள்ளனர். அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் சபரிமலைக்கு வரும் பெண்களிடம், பிரச்னைகளை எடுத்துக்கூறி சமாதானப்படுத்தி திருப்பி அனுப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும். பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் 3 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.