துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்கத் தமிழர் செல்வராஜு படுகொலை! போலீசார் புதிய தகவல்கள்!!

வடக்கு கரோலைனா மாநிலத்தின் கேரி நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்த்தில் அமெரிக்கத் தமிழர் செல்வராஜு வெள்ளியங்கிரி பலியானார். அவர் வசித்து வந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள நீச்சல் குளம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. செல்வராஜு மிகவும் எளிமையான பழகுவதற்கு இனிமையான மனிதர், கரோலைனா தமிழ்ச் சங்கத்தில் நிர்வாகக் குழுவில் பணியாற்றியிருக்கிறார். இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில், செல்வராஜு படுகொலை குறித்து கேரி நகரப் போலீசார் புதிய
 

வடக்கு கரோலைனா மாநிலத்தின் கேரி நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்த்தில்  அமெரிக்கத் தமிழர் செல்வராஜு வெள்ளியங்கிரி பலியானார். அவர் வசித்து வந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள நீச்சல் குளம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

செல்வராஜு மிகவும் எளிமையான பழகுவதற்கு இனிமையான மனிதர், கரோலைனா தமிழ்ச் சங்கத்தில் நிர்வாகக் குழுவில் பணியாற்றியிருக்கிறார். இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், செல்வராஜு படுகொலை குறித்து கேரி நகரப் போலீசார் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். சம்பவம் நடைபெற்ற பகுதியின் அருகிலுள்ள வீட்டிலிருந்து ஒரு பெண்மணி அவசர எண் 911 க்கு அழைத்து, அவருக்குத் தெரிந்த தகவல்களை கூறியிருக்கிறார்.

மாநில பொது ஆவணச் சட்டத்தின் படி, கேரி நகரப் போலீசார் இந்த 911 அழைப்பு தொலைபேசி உரையாடலின் ஆடியோ வை வெளியிட்டுள்ளார்கள், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அவசர உதவி எண் 911 க்கு அழைத்துள்ள இந்தப் பெண்மணி, “ வீட்டருகே உள்ள நீச்சல் குளம், அலுவலகக் கட்டிடத்திற்கு இடையே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. பாப், பாப், பாப் என்று 5 குண்டுகள் வெடிக்கும் சத்தம் அது. 

மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து வெளியேறிய ஒருத்தர் என் வீட்டு பின்பகுதியில் உள்ள புல்வெளி வழியாக ஓடினார். கையில் ஏதும் ஆயுதம் இல்லை. வெள்ளை அல்லது ஹிஸ்பானிக் இன ஆணாகத் தெரிந்தார். 20 வயது இருக்கலாம். டென்னிஸ் மைதானம் வரை ஓடுவது தெரிந்தது. அதற்குப் பிறகு எந்தப் பக்கம் ஓடினார் என்பதைப் பார்க்க முடியவில்ல,” என்று கூறியுள்ளார்.

கேரி நகர துணைத் தலைமை காவல் அதிகாரி ஷான் ஆண்டர்சன், “ செல்வராஜு கொலை வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரை தெரிந்த தகவல்கள் அடிப்படையில் இது குடும்ப வன்முறை சார்ந்த கொலை அல்ல. இந்த சம்பவத்தில் செல்வராஜு மீது அவருடைய இனத்தின் அடையாளத்தால் குறி வைத்து சுடப்படவில்லை. இதற்கு மேலான தகவல்களை இப்போது தெரிவிக்க இயலாது.

இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத் தருவதற்கு இடையூறாக நாங்கள் வேறு எதையும் கூறுவதை யாரும் விரும்பமாட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார். 

மாநில செனட்டர் வைலி நிக்கல், “செல்வராஜ் படுகொலை அறிந்து பெரும் வேதனை அடைந்தேன். மதிய நேரத்தில் நடைக்காக சென்றவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரி நகர காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். செல்வராஜுக்கு மனைவியும், சிறுவயது மகளும் உள்ளார்கள்,” என்று அறிக்கை மூலம் கூறியுள்ளார்.

வேறு யாருக்கோ வைக்கப்பட்ட குறியில் செல்வராஜு வெள்ளியங்கிரி தாக்கப்பட்டுவிட்டதாக போலீசாரின் முதல்கட்ட தகவல்கள் மூலம் தெரியவருகிறது. பக்கத்து வீட்டு பெண்மணியின் 911 அழைப்பின் படி, ஒரு நபர் தான் ஓடியிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன?, குறிவைக்கப்பட்டது யார்? ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கப்பட்டதன் காரணம் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் வெளிவரும் போது தான் இந்த படுகொலையின் பின்னணி குறித்து முழுமையாகத் தெரியும்.

A1TamilNews.com